நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிர்ல இன்று காலமானார்.
நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிர்ல இன்று காலமானார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலே இருந்து சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், சிறுநீர் பாதை நோய்த்தொற்று, சிறுநீரக குழாய் நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதால், கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா இன்று காலை மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதேபோல, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் இருந்தனர்.
இதனிடையே, இன்று (ஆக., 16) மதியம் வாஜ்பாயின் உடல்நிலையில் தொடர்ந்து கவலைக்கிடம் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தனது 2-வது அறிக்கையில் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, அவரை மருத்துவர்கள் தங்கள் தீவிரக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாஜ்பாய் கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்ற போது வெறும் 13 நாட்களே பதவியில் இருந்தார், இதைத் தொடர்ந்து, 1998-1999 ஆம் ஆண்டுகளில் 11 மாதங்களும் பிரதமராகப் பொறுப்பு வகித்தார். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு மட்டுமே பிரதமராக தனது பதவி காலத்தை நிறைவு செய்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்த காலகட்டத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம், நாட்டில் பதவி வகித்தவர்களில் சிறந்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை (ஆக.,17) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக டெல்லி விஜய்காட் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பா.ஜ.க., தலைமை அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வாஜ்பாய் உடல் கொண்டுவரப்பட உள்ளது.
