திருப்பூர்: திருப்பூரில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பிரபல தொழிலதிபரை காரில் கடத்திய சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பிரபல தொழிலதிபரை காரில் கடத்திய சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் பொதிகை நகரைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 51). இவர் அவினாசி சேவூர் சாலையில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 11-ந்தேதி காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற மணிராஜ் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென மணிராஜ் அவருடைய வீட்டிற்கு திரும்பினார். அப்போது, அவருடன் சென்ற 4 பேரை மணிராஜின் உறவினர்கள் மடக்கி பிடித்தனர். இதில், அந்த 4 பேர் உள்பட 5 பேர் சேர்ந்து மணிராஜை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த 4 பேரையும் பிடித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சியைச் சேர்ந்த ஜவஹர் என்பவரிடம் மணிராஜ் ரூ. 26 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் மணிராஜ் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜவஹர் அவருடைய உறவினர் ஜெகதீஸ் என்பவரிடம் இதுகுறித்து கூறி உள்ளார். இதையடுத்து, மணிராஜை காரில் கடத்தி சென்று பணத்தை வாங்குவதற்கு ஜெகதீஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, ஜெகதீசின் நண்பர்களான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜி (29), தினேஷ் (26), சுபின் (28), நாகராஜ் (22) ஆகிய 4 பேருடன் ஜெகதீஸ் திருப்பூர் வந்துள்ளார். கடந்த 11-ந்தேதி காரில் வந்த மணிராஜை சோளிபாளையம் சாலையில் 5 பேரும் சேர்ந்து, அவர்கள் வந்த காரில் ஏற்றி உள்ளனர். பின்னர், அவரை காரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கிருந்து மணிராஜ் மனைவியிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால்தான் கணவரை விடுவோம் என்று கூறி உள்ளனர். இதனால், அவர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும், அவரை வீட்டில் வந்து விட்டுவிட்டு நீங்கள் கேட்ட பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று மணிராஜின் மனைவி கூறி உள்ளார்.
இதை நம்பிய சுஜி, தினேஷ், சுபின், நாகராஜ் ஆகியோர் மணிராஜை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்துள்ளனர். பின்னர், சோளிபாளையத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, மணிராஜின் உறவினர்கள் அந்த 4 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, சுஜி, தினேஷ், சுபின், நாகராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஜெகதீஸ் மட்டும் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட மணிராஜ் ஈமுக்கோழி மோசடி வழக்கில் கைதானவர் என்பதும், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்று பின்னர் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருப்பூரில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் பிரபல தொழிலதிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.