மதுரை: கலைஞரின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாகவும் கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்று பொது இடங்களில் மு.க.அழகிரி பேசி வரும் நிலையில், மதுரையில் கலைஞர் தி.மு.க., என்ற புதிய கட்சிப் பெயருடன் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை: கலைஞரின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாகவும் கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்று பொது இடங்களில் மு.க.அழகிரி பேசி வரும் நிலையில், மதுரையில் கலைஞர் தி.மு.க., என்ற புதிய கட்சிப் பெயருடன் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் தொண்டர்கள் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நாளை (ஆக.,14) நடக்கிறது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
செயற்குழு கூட்டத்திற்கு பின், பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி அமைத்தல் உட்பட பல விஷயங்கள் குறித்து அடுத்தடுத்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, தி.மு.க.வில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று அழகிரி தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தி.மு.க., தானாக உடையும். நான் உடைக்கத் தேவையில்லை. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தங்கள் பக்கம் தான் உள்ளனர், என்றார். இதன்மூலம், கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்ததுடன், அழகிரியின் தர்மயுத்தமும் தொடங்கியதை வெளிக்காட்டியுள்ளது. இதனால், ஸ்டாலின் கட்சியின் தலைவர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில், அழகிரி தலைமையில் கலைஞர் தி.மு.க., என்ற புதிய கட்சிப் பெயருடன் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், கலைஞர் தி.மு.க., வின் பொதுச்செயலாளரே.....கட்சியும், கொடியும் ரெடி... நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு முதல்முறையாக தி.மு.க., வின் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த மாதிரியான போஸ்டர்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க.,வில் ஒரு தர்மயுத்தம் நடைபெற்றது. தற்போது, அழகிரியின் நடவடிக்கைகளால் மேலும் ஒரு தர்மயுத்தத்தை தமிழக மக்கள் எதிர்நோக்க இருப்பது உறுதியாகியுள்ளது.