கோவை : உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு பெரிய ரக மீன்களின் வரத்து குறைந்துள்ளதாலும், சிறிய ரக மீன்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை : உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு பெரிய ரக மீன்களின் வரத்து குறைந்துள்ளதாலும், சிறிய ரக மீன்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு தமிழகத்திலிருந்து ராமேஸ்வரம், நாகப்பட்டினம், சென்னை, கடலூர், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இருந்து மீன்கள் வருகின்றன. அதே போல் கேரளாவிலிருந்து கொச்சின், கோழிக்கோடு உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்களும் கொண்டு வரப்படுகின்றன. உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு சுமாராக நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் வரை மீன்கள் வருகின்றன. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 70 முதல் 80 டன் வரையிலான மீன்வரத்து உள்ளது.

இதனை உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள 48 கடை வியாபாரிகளும் எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல், மாவட்டம் முழுவதும் சில்லறை விற்பனையாளர்கள் எடுத்து சென்று பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாகவோ அல்லது கடைகள் அமைத்தோ விற்பனை செய்கின்றனர்.
இதனிடையே, கடந்த சில தினங்களாக கேரளாவில் தீவிரம் அடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால் அங்கு பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பெரும்பாலும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

இது போன்ற காரணங்களால் பெரிய ரக மீன்கள் என சொல்லக்கூடிய வஞ்சிரம், வாவல், எட்ட மீன், ஊழி ஆகிய மீன்களின் வரத்து உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு குறைந்துள்ளது. மாறாக, கிழங்கா, சங்கரா, மத்தி போன்ற சிறிய ரக மீன்களின் வரத்து மட்டும் அதிகரித்துள்ளது. இதனால், பெரிய மீன்களின் விலை அதிகரித்தும், சிறிய மீன்களின் விலை குறைந்தும் காணப்படுகிறது.
குறிப்பாக, கிலோ ரூ. 750-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வஞ்சரம் மீன் இன்று ரூ. 900-க்கும், ரூ. 220-க்கு விற்ற அயிலை மீன் ரூ. 180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, ரூ. 200-க்கு விற்பனையாகி வந்த சங்கரா மீன் ரூ. 120-க்கும், ரூ. 150 விற்பனையான மத்தி மீன் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஊழி, பாறை, சீலா போன்ற மக்கள் விரும்பி வாங்கக் கூடிய மீன்கள் விற்பனைக்கே வராதது வியாபாரிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மீன் வியாபாரி அபாஸ் கூறுகையில், "தற்போது கேரளாவில் தான் பெரிய ரக மீன்களின் சீசன். தமிழகத்தில் குறைவாகவே இந்த மீன்கள் தற்போது கிடைக்கும். கேரளாவில் வெள்ளம் காரணமாக வஞ்சரம், வாவல், எட்ட மீன்களின் வரத்து இல்லாததால், மக்களின் வருகையும் குறைந்து வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மீன்களை மக்கள் அதிகம் வாங்காததால், அதன் விலை குறைந்துள்ளது. எனினும், அதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதில்லை," என்றார்.
மற்றொரு வியாபாரி சலீம் கூறுகையில், "பொதுவாக மழை காலங்களில் வியாபாரம் பாதிப்பது இயல்பு தான். கேரளாவில் மீன் சீசன் தொடங்கிய போது வெள்ளம் ஏற்பட்டதால், தற்போது எங்கள் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது" எனக் கூறினார்.

இது குறித்து உக்கடம் மீன் மார்க்கெட் தலைவர் எச்.எஸ்., பாவா கூறியதாவது :- கேரளாவில் இயல்பு திரும்பினால் தான் இங்கு நிலைமை சீரடையும். கிழங்கா. சங்கரா வகை மீன்கள் மட்டும் வியாபாரம் செய்வது கடினம். பெரிய ரக மீன்கள் வரத் தொடங்கியதும் இங்கு வியாபாரம் இயல்பு நிலைக்கு திரும்பும், இவ்வாறு தெரிவித்தார்.