கோவை: கோவையில் 'மருத்துவம் இல்லா பிரசவம்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் 'மருத்துவம் இல்லா பிரசவம்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழங்கால முறைகளைப் போல் மருத்துவம் இல்லாமல், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த திருப்பூரைச் சேர்ந்த பெண் கிருத்திகா உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சியரங்கு வரும் 26-ம் தேதி நடைபெற இருப்பதாகக் கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த நிஷ்டை என்ற நிறுவனத்தின் தலைவர் ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியிருந்தார்.
இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வு நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் மூலமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹீலர் பாஸ்கரிடம் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் எனக் கூறி விளம்பரப்படுத்தி விட்டு, ஆலோசனைக் கட்டணமாக தலா ரூ. 5,000 என பலரிடம் பாஸ்கர் வசூலித்ததாகத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த குனியமுத்தூர் போலீசார், மோசடி செய்து பணம் பறிக்கும் முயற்சி மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதே வழக்கில் அவரது மேலாளர் சீனிவாசனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹீலர் பாஸ்கர் தரப்பில் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கி நீதிபதி பாண்டியன் உத்தரவிட்டார். மேலும், அடுத்த 30 நாட்கள் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் ஆணை பிறப்பித்தார்.