கோவை: அனுமதியின்றி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
கோவை: அனுமதியின்றி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துவிட்டு, கடந்த 9-ம் தேதி அதிகாலை பெங்களூர் விமான நிலையம் வந்தடைந்த திருமுருகன் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி படுகொலையை ஐ.நா.,வில் பேசியதற்காகவும், பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டியும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பெங்களூரூவில் இருந்து அவரை தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.
பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க நீதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். மேலும், புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு அவரது வழக்கறிஞருக்குத் தெரியாமல் திருமுருகன் காந்தி மாற்றப்பட்டார். கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி, ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு அனுமதியின்றி ஊர்வலமாக சென்று மாலை அணிவித்ததாக, போலீசார் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இவ்வழக்கில் புதிதாக (124ஏ) தேச துரோக செயல்களில் ஈடுபடுதல், (153) சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட புதிய வழக்குகள் திருமுருகன் காந்தி மீது பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால் வழக்கு, கைது என்பதைக் கண்டித்து பெரியார் தொண்டர்கள், காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து தொடர் மாலை அணிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.