சேலம்: தொடர் கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
சேலம்: தொடர் கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த உபரி நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 80,000 கன அடியானது. கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 80,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், 63,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி ஆற்றில் 1.43 லட்சம் கனஅடி நீர் பெருக்கெடுத்து வருகிறது.
இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து 1.25 லட்சம் கனஅடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா பாசனத் தேவையைவிட அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
120 அடிகொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அத்துடன், 93.47 டிஎம்சி நீர் இருப்பு கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய இருப்பு 92.01 டிஎம்சி ஆக இருந்தது. நீர்வரத்து அதிகமாக இருந்ததால், இன்று இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த மாதம் 23-ம் தேதி 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.