கோவை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதன் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.
கோவை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதன் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

கோவை புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவிற்கு பிரதானமான காய்கறிகள் செல்கின்றன. இங்கு 112 மொத்த காய்கறி விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. தினமும் கேரளாவிற்கு 250 லாரிகளில் காய்கறிகள் கேரளாவிற்கும், கோவை மற்றும் பிற மாவட்டங்களுக்கு 50 லாரிகளில் காய்கறிகள் செல்லும்.

இதனிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது 100 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் கேரளாவிற்கு செல்கின்றன. இதனால் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. விலையும் குறைந்து தான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, எம்.ஜி.ஆர் மார்க்கெட் காய்கறிகள் மொத்த விற்பனையாளர் எஸ். பசீர் கூறுகையில், "காய்கறிகள் தேக்கம் மற்றும் விலை குறைவு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே ஒனம், பக்ரீத் போன்ற பண்டிகளை எதிர்பார்த்து கேரளா மக்கள் காய்கறிகள் அதிகம் வாங்குவார்கள் என கோவை விவசாயிகள் காய்கறிகளை அதிகம் பயிரிட்டுள்ளனர். கேரளாவில் மழை தொடர்ந்து நீடித்தால் இங்கு விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமடையும்." என்றார்.

பொதுவாக கேரளாவில் பிரதானமாக நடைபெறும் பண்டிகளை பொறுத்து கொங்கு மண்டல விவசாயிகள் காய்கறிகள் பயிரிடுவது வழக்கம். இம்மாதம் 27-ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒனம் பண்டிகையை அங்கு விமர்சையாக கொண்டாடப்படுமா என்பது தெரியவில்லை. இதனை எதிர்பார்த்து கொங்கு மண்டலத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகுமா? என்கிற அச்சத்தில் கோவை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, சூலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்தையா என்பர் கூறுகையில், "பீன்ஸ், கேரட், வெங்காயம், முட்டைக்கோசு, பீட்ரூட் ஆகிய காய்கறிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளேன். கேரளாவில் மழை தொடர்ந்தால் எங்கள் நிலைமை மிகவும் மோசடையும்." என்றார்.

"இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இதே நிலை தொடர்ந்தால் காய்கறிகள் கேட்டுப்போகத் தொடங்கிவிடும்." என்றார் மற்றொரு விவசாயி.
இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தலைவர் ஏர்முனை இளைஞர் அணி செயல் தலைவர், NSP.வெற்றி கூறுகையில், "இது போன்று நேரங்களில் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க மாவட்டம் தோறும் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.
அவ்வாறு குளிர்பதன கிடங்கு இருந்தால் விவசாயிகள் தங்கள் காய்கறிகளை 10 நாட்கள் கழித்து கூட விற்கமுடியும் இதனால் விவசாயிகள் பலன் அடைவார்கள். விளைச்சல் அதிகமாக இருக்கும் நேரத்திலும் இது உதவும். சில இடங்களில் குளிர்பதன கிடங்கு உள்ளன. ஆனால், அவை பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன. விவசாய வட்டாரங்களில் அரசாங்கம் குளிர்பதன கிடங்கு அமைத்துத் தரவேண்டும்." என்றார்.