நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் 309 அறைகளை கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் வளாக கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் 309 அறைகளை கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் வளாக கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதனால் யானைகள் மட்டுமின்றி வன விலங்குகள் நகருக்குள் ஊடுருவி பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடந்த 2009-ம ஆண்டு யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
சுமார் 10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை கணக்கெடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. கணக்கெடுக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது யானைகள் வழி தடத்தில் உள்ள 309 அறைகள் கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது 27 கட்டிடங்கள் 48 மணி நேரத்திற்குள் காலி செய்யவில்லை எனில், சீல் வைக்கப்படும். மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த நீதிமன்ற உத்தரவு குடியிருப்புகளுக்கு பொருந்தாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை," என்றார்.