நீலகிரி : தொடர் மழையின் காரணமாக கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : தொடர் மழையின் காரணமாக கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவையொட்டியுள்ள தமிழக மாவட்டமான நீலகிரியிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் நிலச்சரிவும், மரங்கள் முறிந்து விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நடுகனி, கூடலூர் வழியாக கேரளா செல்லும் வழித்தடங்களில் குளம் போல தண்ணீர் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, கூடலூர் கோழிக்கோடு செல்லும் மற்றொரு சாலையான வயநாடு வைத்திரி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதோடு, மரங்களும் சாலையின் குறுக்கே ஆங்காங்கே முறிந்தும் விழுகின்றன. எனவே, அந்த சாலைகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.
ஆகவே, கூடலூர் வழியிலான கேரள பயணத்தை வாகன ஓட்டிகள் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் தேர்வு செய்து செல்லுமாறும், கூடலூர் வழியாக கேரளா செல்வோர், பாதுகாப்புடன், எச்சரிக்கையாகப் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கிக் கிடக்கும் கேரளா மாநிலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் மற்றும் கப்பற்படையிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் வர இருப்பதாகவும் அவர் கூறினார்.