கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை மூன்றாவது நாளாக நிரம்பி வழிகிறது.
கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை மூன்றாவது நாளாக நிரம்பி வழிகிறது.
பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முதல் மீண்டும் அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி தற்போது நான்கு மதகுகள் வழியாக பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானியாற்றின் வேகம் தீடீரென அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் காரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில், பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கவும், யாரும் ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, துவைக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருக்கெடுத்து ஓடும் பவானியாறு பவானிசாகர் அணையைச் சென்றடைவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயரும் நிலை உருவாகியுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை தற்போதைய பருவமழை காரணமாக கடந்த இரு மாத காலத்தில் மட்டும் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.