சென்னை: உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் முன்னிலையில் ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அண்ணா சமாதி அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை: உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் முன்னிலையில் ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அண்ணா சமாதி அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுவாசக் கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஜுலை மாதம் 28-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனையின் முன்பு குவிந்த வண்ணம் இருந்தனர்.
அவர்களை தடியடி நடத்தி போலீசார் களையச் செய்தனர். எனவே, அவரது உடல்நிலைக் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஜுலை 30-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, சீராகியதாகக் கூறப்பட்டது. இதனால், அதிர்ச்சியில் உறைந்த தொண்டர்கள் மீண்டும் நிம்மதியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. 24 மணிநேர சிகிச்சைக்கு பின்னரே, நிலைமை குறித்து கூற முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், காவேரி மருத்துவமனையின் முன்பு மீண்டும் கடல்போல தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் மற்றும் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை 6.10 மணியளவியல் கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கேட்டு, தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.
இதைத் தொடர்ந்து, கோபாலபுரத்தில் நேற்றிரவு 8.30 மணி முதல் 1 மணி வரை கருணாநிதியின் உடலுக்குக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 3 மணி வரை சி.ஐ.டி., காலனியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகினர் நடிகர்கள் அஜித், பிரபு, நாசர், கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியின் உடலுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், இன்று மாலை 4 மணியளவில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கில் இருந்து புறப்பட்டது. வழிநெடுகிலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் புடைசூழ அண்ணா நினைவிடம் நோக்கி அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அணுஅணுவாக நகர்ந்த இறுதி ஊர்வலத்தில் தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடைசியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு சென்றடைந்த கருணாநிதியின் உடல், அவரது விருப்பப்படி, 'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் அடங்கிய சந்தனப் பேழைக்குள் கிடத்தப்பட்டது.

5 முறை முதலமைச்சரான கருணாநிதிக்கு கடைசியாக ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க சம்பிரதாயம், சடங்குகள் ஏதுமின்றி போராடிக் கிடைத்த மெரினா மண்ணுக்குள் அவரது திருவுருவ உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை நேரிலும், தொலைக்காட்சிகளிலும் கண்ட தி.மு.க., தொண்டர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பால், தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது, முதுபெரும் அரசியல் தூணான கருணாநிதியின் மறைவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 95 ஆண்டுகளாகத் தமிழகத்திற்கு ஒளி கொடுத்த திராவிட இயக்கச் சூரியனின் மறைவுக்கு சிம்ப்ளிசிட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.