கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
கோவை: கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

எழுத்தாளர், பத்திரிகையாளர், வசன கர்த்தா மற்றும் அரசியல் சாணக்கியன் என்ற பன்முகங்கள் கொண்ட கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்து, அந்தந்த மாவட்டங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது 14 வயதில் இருந்து பத்திரிக்கையாளனாக சமூகத்திற்கு தனது கடமையைத் தொடங்கியவர் இறுதிவரை மக்களின் உரிமைக்காகப் போராடினார். ஒரு பத்திரிக்கையாளன் வெற்றி மற்றும் தோல்வியை எப்படி சமாளித்து போராட வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர்.
அவரது கொள்கைகளையும், தமிழ்ப்பற்றையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே இன்றைய பத்திரிக்கையாளருக்கு விட்டுச்சென்ற சொத்துக்கள் எனவும் திருநங்கை , திருநம்பி என அழைக்கக் கற்றுக்கொடுத்து அவர்களையும் இந்த சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ வழி வகுத்தவர் கலைஞர்.
மேலும் 108 அவசர ஊர்தி திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கவும், மென்பொருள் துறையில் பூங்காக்களை உருவாக்கி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்க உதவியவர் கருணாநிதி.
அவரது மறைவு தமிழக பத்திரிக்கையாளர்களுக்குப் பேரிழப்பாகும் என்பதை உணர்த்து வண்ணம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பாக தமிழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையை பொருட்படுத்தாமல் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
