கோவை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கோரி கோவையில் தி.மு.க., கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கோரி கோவையில் தி.மு.க., கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும். மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் தி.மு.க., சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல் இருப்பதால், மெரினாவுக்கு பதிலாகக் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கத் தயார் என அரசு விளக்கமளித்தது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள செட்டிவீதியில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க., தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியிலும் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கோட்டைமேடு பகுதியில் ஏராளமான தி.மு.க.,வினர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.
இதேபோல, சென்னை மெரினா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கோரி தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.