சென்னை: மெரினா கடற்கரையில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெரினா கடற்கரையில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார். இந்நிலையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிடோர் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும். மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும், என செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், சட்டம் அனுமதிக்கிறதா என அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்திருந்தார். இதனால், தி.மு.க.,வினர் எதிர்பார்த்ததைப் போலவே, மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும், மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதால், கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் அனுமதியளிக்க முடியாது. மேலும், சர்தார் வல்லபாய் படேல் சாலையின் முகப்பில் உள்ள காந்தி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருக்கிறது, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தி.மு.க., குடும்பத்தினர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தி மனு அளித்துள்ளார். இதற்கு அரசு செவிசாய்க்காததால், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக இன்று இரவு 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.