கோவை: ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘எப்படித்தான் வளர்ப்பதோ’ - குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 13 வயது முதல் 18 வயது வரையிலான பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
கோவை: ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘எப்படித்தான் வளர்ப்பதோ’ - குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 13 வயது முதல் 18 வயது வரையிலான பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
டீன் ஏஜ்-ல் இருக்கும் பிள்ளைகளுக்கு தான் குழந்தையா? அல்லது பெரியவர்களா? என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இந்த வயதில் தீர யோசிக்காமல் திடீர் திடீரென்று முடிவுகள் எடுப்பார்கள்.
தன் செயலினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பெரும்பாலும் யோசிக்க மாட்டார்கள். சீக்கிரமாக உணர்ச்சி வசப்படுவார்கள். திடீரென்று உயரமாவார்கள், குரலில் மாற்றம் வரும். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால் எதிர்பாலின ஈர்ப்பு அதிகமாக இருக்கும்.
பெண் பிள்ளைகள் தங்களுடைய வெளித்தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆடை, அலங்காரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முகப்பரு வந்தால் கூட கவலை கொள்ளும் வயது. எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக காணப்படும்.

நண்பர்கள் பேச்சையே அதிகமாக கவனத்தில் கொள்வார்கள். சாகசங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். அது தீய பழக்கங்களுக்கும் பொருந்தும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை செய்து பார்த்தால் தான் என்ன? என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள்.
தீய பழக்கத்தில் மூழ்கிவிடவும் வாய்ப்புகள் உண்டு. இதில் ஆண், பெண் பேதமில்லை. இன்றைய நவ நாகரீக உலகில், நம் நாட்டின் பெரு நகரங்களில் கூட பெண்கள் குடிப்பது அதிகரித்து வருகிறது. மது மறுவாழ்வு மையங்களில் பெண்களும் சிகிச்சை பெறும் சூழல் உருவாகிவருகிறது.
இன்றைய காலகட்டத்தில் தங்களுடைய பிள்ளைகளை மது மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரும் சவால் பெற்றோர்களுக்கு உள்ளது.
தனக்கு சுதந்திரமே கிடையாது என்றும், எப்போதும் சுதந்திரமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டே இருப்பார்கள். பிள்ளைகளின் ஆர்வமும் மாறிக்கொண்டே இருக்கும். சில நேரங்கள் விளையாட்டில், சில நேரம் இசையில் என மாறி மாறி சென்று கொண்டே இருப்பார்கள்.
இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இருபது வயதைத் தாண்டி பெரியவர்கள் ஆனதும் தன்னுடைய பாதை எது என்பதை தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். இந்த வயதில் நிறைய தகவல்கள், விஷயங்கள் அவர்களுடைய மூளை சேகரித்து வைக்க முடியும். ஆகவே நிறைய செயல்பாடுகளை கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.
யாரையும் அதிகாரத்தைக் கொண்டு அடிபணிய வைக்க முடியாது. குரலை உயர்த்தி பிள்ளைகள் முன் பேசாதீர்கள். புத்திசொல்லிக் கொண்டே இருப்பதை விரும்பவே மாட்டார்கள். பெற்றோர் தங்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு பேசாமல், எப்போதும் ஒரே மாதிரி பேச முயல வேண்டும்.
அவர்களுடைய கடமை, பொறுப்பு எது என்பதை தெளிவாகவும், பொறுமையாகவும் எப்போதுமே அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.