திருப்பூர்: திருப்பூர் அருகே கடன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அருகே உப்பாறு அணை செல்லும் சாலையில் கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் முத்துசாமி என்பவர் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இவர், தனது தாய், தந்தை, மனைவி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார். தமிழகத்தில் பருவ மழை அதிகளவு பெய்திருந்தாலும், உப்பாறு அணைக்கு நீர் வரத்து இல்லாததால், விவசாயம் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார். இதன் காரணமாக விவசாயத்திற்காகள மற்றும் சொந்த செலவுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலும் கடன் பெற்றுள்ளார்.

தொடர்ந்து கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் தவித்து வந்த முத்துசாமி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக முத்துசாமியின் மனைவி செல்வி, அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்குக் கூலி வேலைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த முத்துசாமி நேற்றிரவு தனது மகன் மாணிக்க சத்தியமூர்த்தி(4), மகள் ராஜலட்சுமி (11) இருவரையும் வீட்டினுள் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, பின்னர், தனது தாய் மயிலாத்தாளுடன்(70) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்த முத்துசாமியின் தந்தை வேலுச்சாமி, தனது மனைவி, மகன், பேரக்குழந்தைகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, இவர் அளித்த தகவலின் பேரில் குண்டடம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்காகப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடன் மற்றும் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை சமபவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.