கோவை: பாரம்பரியமான சுகப்பிரசவ முறையில் குழந்தை பெற வேண்டும் என்பது இன்றைய நவீன காலத்து பெண்களின் கனவு. பெரும்பாலும் அவர்களின் கனவு, பத்து மாத தவத்திற்கு பின் கலைந்துவிடுகிறது.
கோவை: பாரம்பரியமான சுகப்பிரசவ முறையில் குழந்தை பெற வேண்டும் என்பது இன்றைய நவீன காலத்து பெண்களின் கனவு. பெரும்பாலும் அவர்களின் கனவு, பத்து மாத தவத்திற்கு பின் கலைந்துவிடுகிறது.
கலாச்சார மாற்றம், உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம், இலாப நோக்கில் செயல்படும் சில மருத்துவமனை நிர்வாகங்கள் என்று பல்வேறு காரணிகள் சுகப்பிரசவங்கள் தடைபடக் காரணமாக உள்ளது. இந்த சூழலில், பாரம்பரிய மருத்துவம் குறித்த பரப்புரையை மேற்கொண்டார் கோவையைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கர்.
ஹீலர்
கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். பொறியியல் பட்டதாரியான இவர் சிறு வயது முதலே ஒவ்வாமை, நாள்பட்ட தலைவலி, கால்-கை வலிப்பு மற்றும் தோல் நோய் போன்ற பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பான மருத்துவம் மூலமாகவே ஹீலருக்கு பாரம்பரிய மருத்துவ முறை மீதான நம்பிக்கை பிறந்துள்ளது. இதனால், புத்தகங்களைப் படித்தும் இயற்கை வழி வைத்தியர்கள் சிலர் மூலமாக பாரம்பரிய முறை குறிப்புகளை பெற்றார்.

இதன் மூலம், கோவையில் 'நிஷ்டை' மையத்தைத் தொடங்கினார். அந்த மையத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான பயிற்சியை மற்றவர்களுக்கு அளித்துள்ளார். மேலும், ஆங்கில மருத்துவ முறையை எதிர்த்தார். பாரம்பரிய மருத்துவ முறையே சிறந்தது என்று கூறி பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். ஹீலரின் மருத்துவ குறிப்புகளைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டது. இதனால் புகழும் பெற்றார்.
கார்பரேட்டுகளின் வணிக நோக்கத்திற்காக மருத்துவம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கடுமையாக சாடி வீடியோக்களை வெளியிட்டார். மேலும், பச்சிளம் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் தடுப்பூசிகளும், பிற்காலத்தில் மனிதனுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் அதற்காகவே தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தனது 'நிஷ்டை' மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்டோரை பணிக்கு அமர்த்தி வியாபாரப் பாய் விரித்துள்ளார். அங்கு வரும் நோயாளிகளிடம் அடிப்படை மருத்துவத்திற்கு ரூ.1000 வசூலித்தார். அவர்களுக்கு இயற்கை பானம், யோகாசனம் போன்றவற்றை வழங்கினார்.
பிரசவம்
கூட்டம் அதிகரிக்க, அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துள்ளார் ஹீலர். நிஷ்டை மையத்தில் பிரசவம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். மேலும், வரும் 26-ம் தேதி சுகப்பிரசவம் தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டார் ஹீலர். அதற்கான விளம்பரங்களையும் செய்துள்ளார்.

இந்த நேரத்தில் தான் திருப்பூரில் கிருத்திகா என்ற கர்ப்பிணி பெண், யூடியுப் மூலம் பிரசவம் பார்க்கப்போய் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரது கணவரும் கைது செய்யப்பட்டுவிட்டார். இதனைத் தொடர்ந்தே சுகாதாரத்துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், தன்னிச்சையாக பிரசவம் பார்ப்பதாக ஹீலர் பாஸ்கர் மீது புகார் தரப்பட்டது. புகாரின் பேரில் ஹீலர் பாஸ்கரை கடந்த 2-ம் தேதி குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி செய்தல், ஏமாற்றுதல்) மற்றும், 511 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மோசடி

அவரிடம் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, அவர் ஒரு மோசடி ஆசாமி என்று தெரிவித்துள்ளனர். இவரை நம்பி வரும் கர்ப்பிணிகளிடமும், அவரது குடும்பத்தினரிடமும், "நான் தரும் பயிற்சிகளை மேற்கொண்டால், சுகப்பிரசவம் சுலபம்." என்று ஆசை வார்த்தை காட்டியிருக்கிறார். மேலும், அதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தனக்கு தர வேண்டும் என்றும், அதுவும் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் என்றும் கூறி மோசடி செய்ததாக தெரிவிக்கிறது காவல்துறை வட்டாரம்.

சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்ற கனவுடன், இது போன்ற மோசடி ஆசாமிகளிடம் சிக்கி, வாழ்வை சீரழித்துக்கொள்ள பெண்கள் முனைப்பு காட்டக்கூடாது என்பதும், இன்னொரு கிருத்திகா தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பதே சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.