கோவை: மருத்துவர்களின் துணையின்றி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தெரியவந்தால், அது தொடர்பாக தகவல் தெரிவிக்க புகார் எண்ணை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை: மருத்துவர்களின் துணையின்றி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தெரியவந்தால், அது தொடர்பாக தகவல் தெரிவிக்க புகார் எண்ணை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ பார்த்து பிரசவம் பார்க்கப்பட்டதால், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, தேனியிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
எனவே, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என தமிழக அரசும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பழங்காலத்தில் வீட்டில் வைத்தே பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், இந்த காலத்திலும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடியும் எனவும் பலர் இணையதளத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் துணையின்றி வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வீடியோ பார்த்தோ, திரைப்படங்களைப் பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எம்.பி.பி.எஸ்., மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்கத் தகுதி பெற்றவர்கள்.

பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் தாய் நல சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்சேய் நலனை காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
வீட்டில் பிரசவம் பார்ப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 102, 104 ஆகிய எண்கள் மூலம் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் அளிக்கலாம். 044-24350496/24334811 மற்றும் 9444340496 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.