திருப்பூர் : குண்டும், குழியுமாகக் காட்சியளித்த சாலைகளை, சக போலீசாரின் உதவியுடன் மண்ணை நிரப்பி சமன் செய்த திருப்பூர் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருப்பூர் : குண்டும், குழியுமாகக் காட்சியளித்த சாலைகளை, சக போலீசாரின் உதவியுடன் மண்ணை நிரப்பி சமன் செய்த திருப்பூர் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் சாலை மேம்பாட்டுப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இதில், பல்வேறு இடங்களில் சாலை பணிகள் சரிவர முடியாமலும், சாலைகள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாகவும் இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், மோசமான சாலைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் கீழே விழும் இடங்களைக் கண்டறிந்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவலர் பாண்டியராஜன், விபத்துகளை தடுக்கும் வகையில் வெள்ளியங்காடு பிரிவு, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள குழிகளில் உடன் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் மண்ணை நிரப்பி சாலைகளை சமன்படுத்தினார்.

போக்குவரத்து காவலர்கள் என்றாலே வாகன ஓட்டிகள் பயந்து ஓடும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையின் பணியை சிரமம் பாராமல் மண்ணை வரவழைத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று சாலையை சமன்படுத்திய இவரின் நற்பணியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்ல, விபத்துகளைத் தடுப்பதும் காவலர் பணிதான் என்பதை உணர்த்தும் வகையிலும், அதனை மேற்கொள்ள இதுவும் ஒரு வழிதான் என பல காவலர்களுக்கு, போக்குவரத்து காவலர் பாண்டியராஜன் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.