கோவை : மருத்துவம் இல்லாத பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என்ற சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ஹுலர் பாஸ்கரின் நிஷ்டை மையத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : மருத்துவம் இல்லாத பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என்ற சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ஹுலர் பாஸ்கரின் நிஷ்டை மையத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழங்கால முறைகளைப் போல் மருத்துவம் இல்லாமல், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த திருப்பூரைச் சேர்ந்த பெண் கிருத்திகா உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சியரங்கு வரும் 26-ம் தேதி நடைபெற இருப்பதாகக் கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த நிஷ்டை என்ற நிறுவனத்தின் தலைவர் ஹுலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியிருந்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்த விளம்பரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் ஹுலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது மோசடி செய்து பணம் பறிக்கும் முயற்சி மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் எனக் கூறி விளம்பரப்படுத்தி விட்டு ஆலோசனைக் கட்டணமாக தலா ரூ. 5,000 என பலரிடம் பாஸ்கர் பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹுலர் பாஸ்கருக்குச் சொந்தமான கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை நிறுவனத்தை குனியமுத்தூர் போலீசார் தற்காலிகமாக மூடியுள்ளனர். மேலும், இந்த மையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கணேஷ் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வந்து விடக் கூடாது என்பதற்காக நிஷ்டை மையத்தை மூடக் கோரி அரசு (தாசில்தாருக்கு) அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது," என்றார்.