கோவை : அரசுப் பேருந்துகளில் இருந்து வெளியாகும் கரும்புகையினால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இதனை தடுக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : அரசுப் பேருந்துகளில் இருந்து வெளியாகும் கரும்புகையினால், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாகவும், இதனை தடுக்க போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 1,075 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், 722 பேருந்துகள் நகர் பேருந்துகளாகவும், 353 வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளாகவும் உள்ளன. இதனிடையே, அண்மையில் 172 புதிய பேருந்துகள் கோவை மாநகருக்கு தமிழக அரசு அறிவித்தது. அதில், 65 பேருந்துகள் புதியதாகவும், மீதம் பழைய பேருந்துக்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் இருந்து கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
"முறையான பராமரிப்பு இன்மை, பழுதடைந்த வாகன உதிரி பாகங்களை மாற்றாததே கரும்புகை வெளியேறக் காரணம்," என்கிறார் ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர்.

இந்த கரும்புகையால், வாகனங்களில் செல்பவர்களுக்கு சிறிது நிமிடங்கள் சாலையே தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து கொள்வதால், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கும் தள்ளப்படுகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டி கே. ரூபன் கூறுகையில்," சில நேரங்களில் கரும்புகையினால், சாலையின் எதிர்புறம் முற்றிலும் தெரியாது. அதேவேளையில், நான் ஹெல்மேட் மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிவதால், மூச்சுவிடுவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. அதேவேளையில், கரும்புகையை சுவாசிப்பதனால் இருமல் போன்ற பிரச்சனைகளையும் நான் சந்திக்கிறேன்," எனக் கூறினார்.
"ஹைட்ரோ கார்பனை சுவாசிப்பதன் மூலம் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மேலும், சுவாசப் பாதையில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்," என்கிறார் தனியார் மருத்துவமனை மருத்துவர் கல்பனா.
கோவை டி.என்.எஸ்.டி.சி.,யின் பொது மேலாளர் கோவிந்தராஜ் பேசியதாவது:- பேருந்துகளில் இருந்து வெளியாகும் கரும்புகைக்கு ஓட்டுநர்களே காரணம். ஏனெனில், பேருந்தை இயக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது போக்குவரத்து நெரிசல்களின் போதோ அவர்கள் முழு ஆக்சலேட்டரையும் அழுத்துகின்றனர். ஆகவே, நாங்கள் முழு ஆக்சலேட்டரையும் அழுத்த வேண்டாம் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளையில், ஃபில்டர் பம்ப்ஸ் கோளாறு ஏற்பட்டுள்ள பேருந்துகளுக்கு உடனடியாக உதிரி பாகங்கள் மாற்றி வருகிறோம், என்றார். மேலும், கோவைக்கு வரவேண்டிய புதிய பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார்.