கோவை: கோவையில் 'மருத்துவம் இல்லா பிரசவம்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்த முயன்ற ஹுலர் பாஸ்கர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் 'மருத்துவம் இல்லா பிரசவம்' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்த முயன்ற ஹுலர் பாஸ்கர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.
பழங்கால முறைகளைப் போல் மருத்துவம் இல்லாமல், சமூக வலைதள வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த திருப்பூரைச் சேர்ந்த பெண் கிருத்திகா உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சியரங்கு வரும் 26-ம் தேதி நடைபெற இருப்பதாக கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த நிஷ்டை என்ற நிறுவனத்தின் தலைவர் ஹுலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியிருந்தார்.
இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வு நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் மூலமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹுலர் பாஸ்கரிடம் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி பேசுகையில், "பிரசவத்தின் போதான உயிரிழப்புகளைக் குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில். மீண்டும் ஒரு திருப்பூர் சம்பவம் நிகழாமல் தடுக்க புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு பாஸ்கர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இது போன்ற செயல்களை முயற்சிக்க வேண்டாம். பிரசவம் மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெற வேண்டும்," என்றார்.
இதனிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாஸ்கர் மீது மோசடி செய்து பணம் பறிக்கும் முயற்சி மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் எனக் கூறி விளம்பரப்படுத்தி விட்டு ஆலோசனைக் கட்டணமாக தலா ரூ. 5,000 என பலரிடம் பாஸ்கர் வசூலித்ததாகத் தெரிய வந்துள்ளது.