கோவை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கைத்தறி துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- வரும் பிப்ரவரி மாதம் கோவை கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழக மக்களிடம் வாங்கும் திறன் குறைந்திருப்பது என பொதுவாக சொல்வது சரியானது அல்ல. உற்பத்தியைப் போல நுகர்வோரும் மிகுதியாக இருப்பதால் ஜி.எஸ்.டி., யினால் தமிழகத்திற்கு குறைபாடு இல்லை என்ற நிலையை எட்டியுள்ளோம்.
மேலும், ஜி.எஸ்.டி., வரிகளைக் குறைக்க வேண்டுமென்பதை ஓங்கி ஒலிக்கிற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று சிலவற்றிற்கு ஜி.எஸ்.டி., வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கைத்தறிக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை விரைவில் நிறைவேறும். கைத்தறி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜவுளித்துறை படிப்பு ஆராய்ச்சிகளுக்கு மானியம் மற்றும் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காலதாமதம் ஏற்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.