கோவை: கோவை அரசு மருத்துவமனையின் பிணவறையில் உடலை வாங்க வந்தவர்களிடம் அங்கு பணிபுரிபவர் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையின் பிணவறையில் உடலை வாங்க வந்தவர்களிடம் அங்கு பணிபுரிபவர் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24 ம் தேதி சாலைவிபத்துக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு சுமார் 5 நாட்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால், இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யக்கூட இவர் குடும்பத்தில் பணவசதி இல்லாத சூழல் இருந்தது.
ஆகவே ஏழ்மையில் தவித்த இந்த குடும்பத்திற்கு உதவ திருப்பூரைச் சேர்ந்த சமூக அமைப்பினர் சேர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.
தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க வந்த சமூக அமைப்பினரிடம் மருத்துவமனை பிணவறையில் பணிபுரியும் காண்டிராக்ட் பணியாளர் மன்சூர் என்ற ஊழியர் ரூபாய் 1500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள், "ஏழ்மை குடும்பத்திற்காக உதவ வந்துள்ளோம். ஆனால் எங்களிடமே லஞ்சம் கேட்பது நியாமில்லை." என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பணியில் இருந்த பிணவறை ஊழியர் கறாராக காவல்துறையினர் முன்னிலையிலேயே பணத்தை கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
அப்போது பணம் தரவில்லை என்றால் நீங்களே இறந்த உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றுள்ளார். பணத்திற்காக பணி செய்யவும் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகிய வீடியோ கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் தொடர்ந்து லஞ்சம் புரள்வதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.