கோவை: ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தியாக பிரம்ம கானாஞ்சலி இணைந்து கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டிகேபி-100 என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
கோவை: ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தியாக பிரம்ம கானாஞ்சலி இணைந்து கோவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டிகேபி-100 என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையில் டி.கே பட்டம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் டி.கே.பி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இசைத்துறையில் பெரும் சாதனைகளைப் படைத்து மக்கள் மனதில் இன்றும் கான சரஸ்வதியாக திகழ்பவர் டிகே.பட்டம்மாள்.

இந்நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நேற்று (ஜூலை 29) நடைபெற்றது. விழாவில் டி.கே.பி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. மேலும் டி.கே.பி குறித்த நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவரது முக்கியமான மாணவர்களான பாடகி நித்யஶ்ரீ மகாதேவன், பாடகர் விஜய் சிவா, வயலின் கலைஞர் ஆர்.கே.ஶ்ரீராம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் டி.கே.பி-யின் பேத்தியும், பாடகியுமான நித்ய ஶ்ரீ மகா தேவன் பேசுகையில், "டி.கே.பி பெரிய இசைப்பின்புலம் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரும் அல்ல. இசை வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் அவரது குடும்பப் பின்னணியும் இல்லை.
மிக வறிய குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது நான்கு வயதுக்குள்ளாகவே ஸ்லோகங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் அவரது தந்தை. மிகச் சிறிய வயதில் அபாரமாக ஸ்லோகங்கள் சொல்லும் திறனை அறிந்து பக்கத்து வீட்டு தெலுங்கு பாட்டு வாத்தியார் அவருக்கு தெலுங்கு கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார்.
அப்படியே அவருடைய இசைப் பயணம் துவங்கியது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பெண்கள் மேடையேறிப் பாடுவது என்பது அசாதாரணமான விஷயம். தன் பத்து வயதில் முதன் முறையாக மேடையேறி இசை உலகில் பெண்கள் வெற்றி பெற முடியும் என்று முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவர் காட்டி வழியிலேயே இன்று எங்களைப் போன்ற பெண்கள் மேடையேறிப் பாட முடிகிறது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளன்று அகில இந்திய வானொலிக்கு சென்று ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று பாடினார் டி.கே.பி. தன் வாழ்நாளில் எவ்வளவு சாதனைகள், மற்றும் பெருமைகள் கிடைத்தாலும், இதையே தன் வாழ்நாள் பெருமையாக கருதினார்." என்று பேசினார்.
நிகழ்ச்சியில் டி.கே. பட்டம்மாள் பாடிய சில பாடல்களை எடுத்து அவர் அந்த பாடல்களை கையாண்ட விதம், அதன் தனிச்சிறப்பு , சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் கொடுத்து நித்யஶ்ரீ மகாதேவன், விஜய் சிவா, ஆர்.கே.ஶ்ரீராம் குமார ஆகியோர் பாடி விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பாரதிய வித்யா பவன் தலைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை தாங்கினார்.