கோவை: நாடு முழுவதும் நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தால், சரக்குகளைப் போக்குரவத்தில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வே துறை ரூ. 1.25 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.
கோவை: நாடு முழுவதும் நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தத்தால், சரக்குகளைப் போக்குரவத்தில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வே துறை ரூ. 1.25 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.
டீசல் விலை உயர்வு, சுங்க வரிக் கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 8 நாட்களாக நடைபெற்ற இப்போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தினால் விளை பொருட்களை விற்பனைக்காகப் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லமுடியாமல் விவசாயிகள் திணறினர். இதேபோல, டெக்ஸ்டைல், உரங்கள், ஆட்டோமொபைல் உபகரணங்கள் மற்றும் பல்வேறு தொழில்களும் கடுமையாக முடங்கியது.

இதனிடையே, விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம், காய்கறிகளைப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், அதில், அதிகளவு இடர்பாடுகள் இருந்ததால், பெரும்பாலான விவசாயிகள் ரயில் மார்க்கமான போக்குவரத்தை நாடினர்.
இதற்காக, சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும், கோவை, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்களில் மொத்தம் 32 பார்சல் முன்பதிவு மையங்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன. ரயில்நிலையங்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் சரக்குகளை, ரயில்களில் ஏற்றும் செலவுகளை ரயில்வே நிர்வாகம் இலவசமாக செய்து கொடுத்தது.
லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்ற இந்த 8 நாட்களில் மட்டும் சேலம் தெற்கு ரயில்வேத்துறைக்கு ரூ. 1,25,44,443 வருமானம் கிடைத்துள்ளது. இது குறித்து ரயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது :- கடந்த 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ரூ. 1,25,44,443 வருமானம் கிடைத்துள்ளது. 3.191.5 டன் எடையுள்ள சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 158.45 சதவீதம் அதிகமாகும். 2017-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ. 48,53,737 வருமானமும், 1,313.4 டன் சரக்குகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார்.
லாரிகளின் வேலைநிறுத்தத்தினால் சரக்குப் போக்குவரத்திற்காக சிறப்பு ரயிலை சேலம் தெற்கு ரயில்வே இயக்கியது குறிப்பிடத்தக்கது.