கோவை : லாரிகளின் வேலைநிறுத்தம் தொடர்ந்து 7-வது நாளாக நீடித்துள்ள நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு சுமார் 200 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை : லாரிகளின் வேலைநிறுத்தம் தொடர்ந்து 7-வது நாளாக நீடித்துள்ள நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு சுமார் 200 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

டீசல் விலை உயர்வு, சுங்க வரிக் கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில், விளை பொருட்களை விற்பனைக்காகப் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லமுடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். தமிழக அரசும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம், காய்கறிகளைப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அறிவித்தது. ஆனால், அதில், அதிகளவு இடர்பாடுகள் இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் ரயில் மார்க்கமான போக்குவரத்தை நாடியுள்ளனர்.
லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது முதல் தற்போது வரை நாள்தோறும் 10 டன் அளவிலான காய்கறிகள் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதேபோல, கோவை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களில் மட்டும் 200 டன் காய்கறிகள் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
"வாடிக்கையாளர்களிடம் இருந்து காய்கறிகள் சிறிய ரக வாகனங்களில் பார்சல் அலுவலகத்திற்கு ஏற்றி வரப்படும். நாள்தோறும் இயக்கப்படும் ரயிலில்,சரக்குப் பெட்டியில் 23 டன் காய்கறிகள் கொண்டு செல்லாம். கோவையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் பலவிதமான ரயில்களில் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக, கோவையில் இருந்து கேரளாவிற்கு நாள்தோறும் 8 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. லாரிகளின் வேலைநிறுத்தம் தொடருமேயானால், காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது இருமடங்காகும்," என்கிறார் குரு, கோவை ரயில் நிலைய, உரிமம் பெற்ற பார்சல் அனுப்புநர்.

விவசாயிகளின் நலனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்தில், கோவை, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்களில் மொத்தம் 32 பார்சல் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ரயில்நிலையங்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் சரக்குகளை, ரயில்களில் ஏற்றும் செலவுகளை ரயில்வே நிர்வாகம் இலவசமாக செய்து வருகிறது.
கோவை ரயில்நிலையத்தின் பார்சல் அலுவலக வர்த்தக கண்காணிப்பாளர் கூறுகையில், "ரயிலின் சரக்குப் பெட்டிகளில் இடம் இருக்கும் அளவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்யும் சரக்குகள் எடுத்து வரப்படுகின்றன. 23 டன் எடைக்கு அதிகமாக சரக்குகளை அனுப்ப நினைக்கும் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்," என்றார்.

இதனிடையே, 468 டன்னுக்கும் அதிகமாக சரக்குகள் முன்பதிவு செய்யப்பட்டால், சிறப்பு சரக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். அண்மைக்காலமாக சேலம் மண்டலத்தில் திருப்பூர் - ஹவுராவிற்கு 468 டன் எடையுள்ள காட்டன்கள் சீமாவால் அனுப்பி வைக்கப்படுகிறது.