மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளப் பெருக்கால் உயர் மட்ட பாலம் நீரில் மூழ்கியது. இதனால், நான்கு கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளப் பெருக்கால் உயர் மட்ட பாலம் நீரில் மூழ்கியது. இதனால், நான்கு கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பியது. இதனையடுத்து, பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றின் வழியாக பவானி சாகர் அணையை வந்தடைகிறது. இந்த நிலையில், பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 110 அடியை எட்டியுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளம் காரணமாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சிறுமுகை அருகே உள்ள காந்தையாற்று உயர்மட்ட பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியது. இதனால், நான்கு கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. காந்தவயல், ஆலூர், உளியூர் உள்ளிட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் இரண்டு அரசு ஆரம்பள்ளியும், ஒரு அங்கன்வாடி பள்ளியும் செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும் கேள்விக்குறியாகி உள்ளது.

சுமார் 20 அடி உயரம் கொண்ட இந்தப் பாலம் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 105 அடிக்கும் மேல் உயர்ந்ததால் தற்போது நீரில் மூழ்கி உள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த லட்சக்கணக்கான வாழைகளும் நீரில் மூழ்கி உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அவ்வப்போது இதே நிலை தொடர்வதால், இந்தப் பாலத்தை 30 அடிக்கும் மேல் உயர்த்த அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.