கோவை: கோவையில் தனியார் மகளிர் விடுதியில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தனியார் மகளிர் விடுதியில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீளமேடு சேரன்மாநகர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (48). இவர் கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் 'தர்ஷனா' என்ற பெயரில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். 4 மாடிகளைக் கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கி உள்ளனர். இந்த விடுதியின் காப்பாளராக கோவை தண்ணீர்பந்தலை சேர்ந்த புனிதா (32) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதி உரிமையாளரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஒன்றில், விடுதியில் இருக்கும் 5 மாணவிகளை மட்டும் காப்பாளர் புனிதா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை மது அருந்துமாறும் கட்டாயம் செய்துள்ளார். மேலும், விடுதி உரிமையாளர் மற்றும் சிலருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனக் கூறி தவறான பாதைக்கு செல்ல மாணவிகளை அழைத்ததுடன், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது தொடர்பாக தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், காப்பாளர் புனிதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்து தலைமறைவான இருவரையும் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். மேலும், உரிய அனுமதி பெறாமல் இந்த விடுதியை ஜெகநாதன் நடத்தி வந்ததாக மாவட்ட சமூகநலத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திருநெல்வேலி ஆலங்குளம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குற்றாலம் செல்லக்கூடிய பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், அந்த சடலத்தை மீட்டு விசாரித்ததில், அது கோவையில் பெண்கள் விடுதி நடத்தி பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கிய ஜெகநாதன் என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர போலீசாருக்கு திருநெல்வேலி போலீசார் தகவல் கொடுத்தனர். இதில், ஜெகநாதன் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா..? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா..? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல, இவருடன் தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான புனிதா எங்கு உள்ளார்..? ஜெகனாதனின் மரணத்தில் அவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.