கோவை: கோவையில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் தொகையில் ரூ. 22 லட்சம் வரை திருடிய 2 ஊழியர்களை ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் தொகையில் ரூ. 22 லட்சம் வரை திருடிய 2 ஊழியர்களை ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் செக்யூர் வேல்யூ பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலமாக கோவையில் உள்ள சுமார் 250 ஏ.டி.எம்., இயந்திரங்களுக்கு பணம் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஏ.டி.எம்., இயந்திரங்களில் கடந்த ஜூன் 3 முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் நிரப்பப்பட்ட பணத்தில் ரூ. 22 லட்சம் குறைந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் எம்.ஜெகதீஷ் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., மையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அந்த நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றும் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சாஜூதீன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ், அக்பர் அலி ஆகியோர் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. மூவரும் அந்த ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு, தனியாக இருசக்கர வாகனங்களில் மீண்டும் வந்து ஏ.டி.எம்., இயந்திரத்தைப் பழுது பார்ப்பது போல் நடித்து பணத்தை திருடியுள்ளனர்.
இதையடுத்து, சாஜூதீன், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அக்பர் அலியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் ஏற்கனவே இதுபோன்ற கையாடல்கள் நடந்துள்ள சூழலில் மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அந்த நிறுவனத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.