கோவை: மூன்று திசைகளிலும் ஷாப்பிங் மால்கள், திரும்பிய இடங்களெல்லாம் தியேட்டர்கள், மலைப் பிரதேசங்கள், அருவிகள் மற்றும் பூங்காக்கள் என்று நம் ஊரில் கேளிக்கைகளுக்கு பஞ்சமில்லை.
கோவை: மூன்று திசைகளிலும் ஷாப்பிங் மால்கள், திரும்பிய இடங்களெல்லாம் தியேட்டர்கள், மலைப் பிரதேசங்கள், அருவிகள் மற்றும் பூங்காக்கள் என்று நம் ஊரில் கேளிக்கைகளுக்கு பஞ்சமில்லை.
இயற்கையும், செயற்கையும் கை கோர்த்து கோவை மாவட்ட மக்களுக்கு சற்றும் அலுப்பு தட்டாமல் கவனித்துக் கொள்கின்றன. அவ்வாறு பல ஆண்டு காலமாக கோவை வாசிகளுக்கு 'போர்' அடிக்காமல் பார்த்துக் கொண்ட இடம் தான் வ.உ.சி பூங்கா.

இன்னும், இந்த பூங்காவின் சேவை தொடர்ந்து கொண்டே இறக்கிறது. வார இறுதி நாட்களில் இந்த பூங்காவுக்குள் நுழைந்தால், பென்சன் வாங்கும் முதியவர்கள் தொடங்கி, போன மாசம் பிறந்த சின்ன குழந்தை வரைக்கும் 'ஹாயாக' உலாவிக் கொண்டிருப்பார்கள். அத்தனை பேருக்கும் உகந்த வகையில் அமைந்துள்ளது இந்த பூங்கா.

மற்ற நாட்களில் காதலர்களுக்கு பாதுகாப்பான இடமாகவும், கல்லூரி மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிகழ்த்தும் 'பார்ட்டி-ஸ்பாட்-ஆகவும் உள்ளது. மேலும், காந்திபுரத்தில் பஸ் வர 'லேட்' ஆகும் போது, "போற போக்குல அந்த பூங்காவுக்கு போயிட்டு போலாமே.,!" என்ற நடைபோடும் கூட்டமும் அங்கு வருவதுண்டு.
ஆனால், "இத்தனை பேரு வந்துட்டு போற பூங்காவ., இப்படி வச்சிருக்காங்களே.,?" என்று அங்கு வந்து செல்லும் மக்கள் புலம்பிச் செல்லும் அளவுக்கு, வ.உ.சி பூங்காவின் நிலை மோசமாகி வருகிறது.
உயிரியல் பூங்கா

ஏறத்தாழ 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் மயில், வாத்து, பாம்பு, கழுகு, கிளி, கடமாண், முதலை போன்ற பல்வேறு வகையான விலங்குகளும், பாலூட்டிகளும், பறவைகளும், ஊர்வனங்களும் வளர்க்கப்படுகின்றன.
கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்க்கப்படும் அந்த உயிரினங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

"சில ஆண்டுகளுக்கு முன் ஏராளமான உயிரினங்களோடு இந்த பூங்கா பசுமையா இருந்துச்சுங்க.! ஆனா, இப்போ விலங்குகளோட கழுவு நீர் துர்நாற்றம் தான் இங்க வரும் மக்களை வரவேற்குதுங்க. முன்னே இருந்த பெரும்பாலான உயிரினங்கள் இப்போ இல்லை. கிளி, மான், பாம்பு மட்டுமே பார்வையாளர்களுக்கு பிடிச்சிருக்கு. பார்வையாளர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் உயிரினங்கள் வைக்கப்பட்டுள்ள கூண்டின் கம்பிகள் சேதமாகி இருக்கு.

பூங்காவில் எங்கு திரும்பினாலும் காய்ந்த குப்பைகளும், கழிவுநீர் குட்டைகளும் உள்ளது. இப்படி இருந்தால் எப்படிங்க கூட்டம் வரும்? என்று புலம்பல் பேட்டி கொடுத்தார், பூங்கா அருகே சில ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருபவர்.

பயனற்ற பலகைகள்
முன்னதாக இந்த பூங்காவை இடமாற்றம் செய்து, விரிவுபடுத்தும் வகையில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காவை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டி, உயர்மட்ட குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

"உயிரியல் பூங்காக்கள் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்கள் குறித்த அரிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கான இடமாக வ.உ.சி பூங்கா இருந்துவந்தது. கூண்டுகளில் உள்ள உயிரினம் பற்றியும் அதன் பல்வேறு பண்புகள் குறித்தும் அருகில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
அதை படிக்கும் மாணவர்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் உயிரினங்கள் பற்றிய தகவல்களை வியப்போடு அறிந்துகொள்வர். ஆனால், தற்போது இந்த தகவல் பலகைகள் அனைத்தும் சேதமடைந்து பயனற்றுக் கிடக்கின்றன. இதனால், உயிரியல் பூங்காவிற்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது." என்கிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான முகமது சலீம்.
பாயிண்டு வரல..,
"பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் இல்லையாமே., அதனால தான் சரியா வேலை செய்யலையாம்" என்று ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்க, என்ன சார் நடக்குது இங்க? என்ற கேள்வியை மாநகராட்சி அதிகாரிகளிடம் எழுப்பினோம்.

திரைப்பட காமெடி ஒன்றில் 'பாயிண்டு வரட்டும்.., பாயிண்டு வரட்டும்..,' என்று கூறிக்கொண்டு சண்டைக்கு போகாமல் ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்கும். அதுபோல, "நிதி வரல., நிதி வரட்டும்.," என்று கூலாக பதிலளிக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
ஒரு காபி குடிக்க ஊட்டி வரை செல்லும் இளம் பட்டாளங்கள் உருவெடுத்து வருகின்றன. அவர்கள் இந்த பூங்காவை மறந்துவிட வெகு நாட்கள் ஆகிவிடாது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உணர்ந்து உடனடியாக பூங்காவின் தரத்தை உயர்த்தினால், என்றும் புகழ் மங்காத வ.உ.சிதம்பரானர் போலவே இந்த பூங்காவும் தலைமுறை கடந்து வாழும்.