கோவை: கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளால் பொதுமக்களுக்கு தரமாகவும், பாதுகாப்பாகவும், தேவையான அளவிலும் குடிநீர் தடையின்றி சீராக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளால் பொதுமக்களுக்கு தரமாகவும், பாதுகாப்பாகவும், தேவையான அளவிலும் குடிநீர் தடையின்றி சீராக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு. க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி முன்னிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகரம் கோவை மாநகராட்சியாகும். அம்ருத் திட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கோவையில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக நிதியில் தமிழகத்தில் கோவையில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
24x7 குடிநீர் திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகத்தை மேலும் தரமாகவும், சீராகவும் வழங்கிட சிறப்பான திட்டமாகும். கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டம் மொத்தமுள்ள 100 வார்டுகளில், பழைய 72 வார்டுகள் (தற்போதைய 60 வார்டுகளில்) இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஆய்வுக்காலம் 1 வருடம், கட்டுமானப் பணிகள் 4 வருடம், செயலாக்க மேலாண்மை இயக்குதல் மற்றும் பராமரிப்பு 21 வருடங்களாகும். மொத்த கால அளவு 26 வருடங்களாகும். இத்திட்டத்தின்படி வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படும்.
எல்லா இணைப்புகளும் மீட்டர் பொருத்திய இணைப்புகளாக இருக்கும். பொதுமக்களின் வீடுகளில் குடிநீர் பயன்பாட்டிற்கேற்ப கட்டணம் விதிக்கப்படும். எல்லா இடத்திற்கும் சீரான தண்ணீர் தேவையான அளவு கிடைக்கும். தற்போது, சிறுவாணி, பில்லூர், ஆழியாறுகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இத்திட்டத்தின் மூலம் எந்த காலகட்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு விநியோகம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் எத்தனை வீடுகளுக்கு எவ்வளவு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது என்ற விபரங்கள் முழுமையாகக் கிடைக்கும்.
இத்திட்டத்தால் மாநகராட்சியின் பராமரிப்பு செலவு குறையும். தற்போதைய காலகட்டத்தில் நீர்மேலாண்மைக்கு மாநகராட்சிக்கு ஆண்டிற்கு ரூ. 75 கோடி செலவு ஆகிறது. முதலாம் ஆண்டில் ஆகும் பராமரிப்பு செலவு ரூ.54 கோடி ஆகும். இயக்குதல் மற்றும் பராமரிப்பிற்கு 21 ஆண்டுகளுக்கு ஆகும் செலவு ரூ.2300 கோடியாகும். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக வீடுகளிலுள்ள எந்த டேப்பிலும் தண்ணீர் வருவதற்கும், ஒரு வீட்டின் முதல் தளம் வரை தண்ணீர் செல்வதற்கும் வகை செய்யப்படவுள்ளது. பாதுகாப்பான குடிநீராகவும், தேவையான அளவிலும் கிடைத்திட வகை செய்யப்படும்.
குடிநீர் இணைப்பு அளிப்பது, மற்றும் குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பது போன்ற அதிகாரங்கள் மாநகராட்சி மற்றும் தமிழக அரசிற்கு மட்டுமே உண்டு. வீடுகளின் பரப்பளவு மற்றும் குடிநீர்; பயன்படுத்தியற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு 33%, மாநில அரசு 20%, தனியார் விற்பனையாளர் 20%, ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ. 156 கோடி பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.