கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் புகழ் மிக்க வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதே போல் இந்தாண்டு 27-ம் ஆண்டு குண்டம் திருவிழா நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதனையடுத்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. ஆடிக் குண்டத்தை முன்னிட்டு 22-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதற்காக அமைக்கப்பட்ட 36 அடி நீலம், 1 1/2 அகலம் கொண்ட குண்டம் அமைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. குண்டம் அருகில் பொங்கல் வைக்கப்பட்டு சிம்ம வாகனத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பூ பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்தது. அதன் பின்னர் தலைமை பூசாரி குண்டத்தை சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். திருவிழாவை முன்னிட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் ஊர்காவல்படை உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
