கோவை: விவசாயப் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் தங்களுக்கு, தற்போதைய வேலைநிறுத்தத்தின் காரணமாக ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியாத அளவிற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர்கள் குமுறுகின்றனர்.
கோவை: விவசாயப் பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லும் தங்களுக்கு, தற்போதைய வேலைநிறுத்தத்தின் காரணமாக ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியாத அளவிற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர்கள் குமுறுகின்றனர்.
டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காப்பீடு திட்டம் உயர்வு போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும், ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் சுமார் 95 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை, கோவையில் சுமார் 15 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கிளினர்கள், லாரி சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஓடுவதை பொறுத்து, நாள் வருமானம் அடிப்படையில் தான் லாரி ஒட்டுநனர்களும், கிளினர்களும் தினசரி சம்பளம் வாங்கி வருகின்றனர். தற்போது, லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வருமானம் இல்லாமலும், வாழ வழியில்லாமலும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து லாரி ஒட்டுநனர் கே. ஜிகா கூறுகையில், "இது வாழ்வா..? சாவா..? என்கிற போராட்டம். லாரிகள் இயங்காததால் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கும் வருமானத்திற்கு வழியில்லை. கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. இதேநிலை நீடித்தால் பட்டினி தான். குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற போகிறோம் எனத் தெரியவில்லை," என்றார்.
மற்றொரு ஒட்டுநனர் ரா. கார்த்தி கூறுகையில், "ஒரு தடவை கோவையில் இருந்து சென்னை சென்று வந்தால் 2 நாட்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும். ஆனால் மாதம் 10 நாட்களுக்கு மேலாக வேலை இருக்காது. தற்போது, பணம் இல்லாமல், என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்," என்கிறார் வேதனையுடன்.
ஊருக்கெல்லாம் காய்கறிகளை கொண்டு சேர்த்த லாரி ஒட்டுநனர்களால், தற்போது ஒரு கிலோ தக்காளி கூட வாங்க முடியவில்லை என லாரி ஒட்டுநனர்கள் தங்கள் வருத்தங்களை வெளிப்படுத்தினார்கள்.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு, செயலாளர் தனராஜ் நம்மிடம் கூறுகையில், "போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இன்னும் மத்திய, மாநில அரசுகள் அழைக்கவில்லை. போராட்டம் மேலும் தீவிரமடையவே வாய்ப்புள்ளது. லாரி ஒட்டுநனர், கிளினர்கள், பராமரிப்பாளர்கள் என அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது," என்றார்.
மத்திய, மாநில அரசுகள் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதே லாரி ஒட்டுநனர்களின் கோரிக்கையாக உள்ளது.