கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 4,000 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்து வருவதால், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 4,000 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்தக் கோரியும் கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான காய்கறிகள் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

விவசாயிகள் தங்கள் பொருட்களை வெளியே அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், காய்கறிகள் அழுகும் நிலை உருவாகியுள்ளது. அதே சமயம் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், தொழில் நகரமான கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் பலர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என சிறு, குறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, 4-வது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை வர்த்தக தேக்கம் அடைந்துள்ளதாகவும், பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.