கோவை: தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தை, பல் பிடுங்கப்பட்ட லோக் ஆயுக்தா என பா.ம.க., இளைஞர் அணியின் விளக்கப் பொதுக் கூட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டது.
கோவை: தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தை, பல் பிடுங்கப்பட்ட லோக் ஆயுக்தா என பா.ம.க., இளைஞர் அணியின் விளக்கப் பொதுக் கூட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டது.
கோவை டாடாபாத் பகுதியில் பா.ம.க.,வின் இளைஞர் அணி சார்பில் லோக் ஆயுக்தா சட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழலை விசாரித்து உரிய தண்டனை அளிக்கக் கூடிய வலுவான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தும் விளக்கக் கூட்டமாக இது நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள லோக் ஆயுக்தா பல் பிடுங்கப்பட்ட லோக் ஆயுக்தா என இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கப் பொதுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியின் மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி பேசும்போது:-
லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரை முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய 3 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதில், உயர்நீதிமன்ற நீதிபதியை முக்கியமாக இணைக்க வேண்டும். ஊழல்கள் வறுமையை அதிகப்படுத்துகிறது. ஆகவே, லோக் ஆயுக்தாவை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களே ஊழல் குற்றத்தில் சிக்கும் பொழுது எப்படி தீர்வுகள் கிடைக்கும்..?. எனவே, லோக் ஆயுக்தாவின் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுபவர்களைப் பொருத்துதான் இந்த சட்டத்தின் பயன்பாடு அமையும். ஊழல் புகார்களில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற நபர்களை தலைமை பொறுப்பில் அமர்த்தினால், இந்த சட்டம் எந்தப் பயனும் தராது. ஆகவே, இதை முறைப்படுத்த வேண்டும். புகார் அளிப்பது தொடர்பான இரகசியங்கள் காக்கப்பட வேண்டிய சூழலை இந்த லோக் ஆயுக்தாவில் கொண்டு வரவேண்டும்.

போலி புகார் என்ற பெயரில் பொதுமக்களைப் புகார் அளிக்க அச்சுறுத்துவது போல உள்ள முரண்பாடுகளை மாற்ற வேண்டும். லோக் ஆயுக்தாவில் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் என அனைவரும் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அதனால் தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குற்ற எண்ணிக்கையைக் குறைக்க சி.சி.டி.வி, கேமிராக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைப்பதின் மூலம் குற்றவாளிகளுக்கு தவறு செய்ய வாய்ப்பு மறுக்கப்படும்.
சாலை விபத்துகளை தடுக்க முதலில் மதுவை ஒழிக்க வேண்டும். சாலை விபத்துகள் அதிகம் நடப்பதற்குக் காரணம் மதுவில் பயணம் செய்வதேயாகும்.

சாலைகள் எங்கும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சரி செய்து மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல, நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். இந்தக் கூட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
