கோவை: கேரள போலீசாரால் கைது செய்து அழைத்துவரப்பட்ட கைதியை கோவை அவினாசி சாலையில் உள்ள கணியூர் அருகே மர்ம கும்பல் போலீ்சாரை தாக்கி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கேரள போலீசாரால் கைது செய்து அழைத்துவரப்பட்ட கைதியை கோவை அவினாசி சாலையில் உள்ள கணியூர் அருகே மர்ம கும்பல் போலீ்சாரை தாக்கி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் மகாராஜன்(43). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூ.45 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
ஜேக்கப் கடன் வாங்கியிருந்த போது தன்னுடைய வோல்வா காரை மகாராஜனிடம் தந்துள்ளார். அதைத் தொடர்ந்து மகாராஜனிடம், வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்த பிறகும் மகாராஜன் காரை தராமல் ஏமாற்றிவந்துள்ளார்.
இதை தொடர்ந்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசார், ஒரு உதவி ஆய்வாளர், மூன்று காவலர்கள் அடங்கிய குழு நேற்று மாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை மாலை 5 மணிக்கு கைது செய்து கேரளாவிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், போலீசார் வந்த கார் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் அருகே வந்த போது, இரவு 11 மணிக்கு அங்கு தயாராக இருந்த சுமார் 30 பேர் கொண்ட மர்ம கும்பல் கேரள போலீசாரை தாக்கிவிட்டு அந்த காரிலிருந்த மகாராஜனை மீட்டுச் சென்றனர்.

இந்தநிலையில், கடத்தல் சம்பவம் தொடர்பாக பாலக்காடு காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரை தாக்கி கைதியை கடத்தி சென்ற சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்? யார் கடத்தி சென்றுள்ளனர்? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையினரைத் தாக்கி கைதியை கடத்திச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.