கோவை: வழக்கம் போல அமைச்சரின் தாமதமான வருகையின் காரணமாக, சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காதது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கோவை: வழக்கம் போல அமைச்சரின் தாமதமான வருகையின் காரணமாக, சி.ஆர்.பி.எப்., நிகழ்ச்சி முதல்முறையாக குறித்த நேரத்தில் தொடங்காதது, வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோவை குருடம்பாளையம் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் மத்திய பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக காலை 11 மணிக்கே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.

வழக்கமாகக் குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி சி.ஆர்.பி.எப்.நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிலையில், அமைச்சரின் வருகை தாமதமானதால் நிகழ்ச்சியைத் துவக்க தாமதம் ஏற்பட்டது. இதோ வந்துவிடுவார்..! இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சிகள் துவங்கும் என பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டாலும் அமைச்சர் வந்த பாடில்லை.
தூங்கி வழிந்த வீரர்கள் :

ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்துப் பார்த்த சி.ஆர்.பி.எப்.,வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டையும் மீறி தூங்கி வழிய ஆரம்பித்தனர். சரியான நேரத்தில் உணவு அருந்திப் பழகிய வீரர்கள் பசியோடு அமைச்சரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஒரு வழியாக இரண்டே கால் மணியளிவில் அமைச்சர் அங்கு வந்து சேர்ந்தார்.

இதனையடுத்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டால், அங்கு சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்து தத்துரூபமாக செயல் விளக்கம் செய்து காட்டினர். பின்னர், அங்கு உள்ள செயல்பாடுகள் குறித்து அமைச்சர் பார்வையிட்டார். கடைசியாக ஒரு வழியாக நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கலைந்து சென்றனர்.
