கோவை: கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் 4-வது புத்தகக் கண்காட்சியில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த வெனிஸ்டா ஸ்னோலின் எழுதிய ’ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ புத்தகம், வாசிப்பாளர்களால் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் 4-வது புத்தகக் கண்காட்சியில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த வெனிஸ்டா ஸ்னோலின் எழுதிய ’ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ புத்தகம், வாசிப்பாளர்களால் விரும்பி வாங்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான 'பபாசி' இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் 265 அரங்குகள் அமைக்கப்பட்டு, 175 பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிற இந்திய மொழிகளின் நூல்களின் பதிப்புகள் விற்பனைக்காக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி போராட்டத்தில் சுட்டுக்கொள்ளப்பட்ட சிறுமி ஸ்னோலின் எழுதிய ‘ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ என்ற கவிதை தொகுப்பிற்கு புத்தக வாசிப்பாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில், வாயில் சுடப்பட்டு உயிர்நீத்த 17 வயது வெனிஸ்டா ஸ்னோலினின் மரணம் அனைவரின் மனதையும் உலுக்கியதோடு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த பல சந்தேகங்களையும் எழுப்பியது.
சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வமிக்க ஸ்னோலின், பல கவிதைகளை தன்னுடைய நாட்குறிப்பில் எழுதி வந்துள்ளார். மக்கள் போராட்டத்தில் ஸ்னோலின் இறந்தபின்னர், அவர் எழுதிய கவிதைள் ‘ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ எனும் பெயரில் கவிதை தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

"ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்ட சிறுமி ஸ்னோலின் எழுதிய கவிதைகளைப் புத்தகமாக தொகுத்து ’பாரதி புத்தகாலையம்’ வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ‘ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ பொதுமக்களால் விரும்பி வாங்கப்படுகின்றது. கோவை புத்தக திருவிழாவிலும் இந்த கவிதை தொகுப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இலக்கியச்செரிவு மிக்க கவிதை தொகுப்பாக இல்லாமல், எளிய நடையில் இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கவிதை தொகுப்பாக இது உள்ளது. இதன் விலை ரூ. 25 மட்டுமே. இதன் மூலம் கிடைக்கும் நிதி முழுவதும் ஸ்னோலினின் பெற்றோரிடம் கொடுக்கப்படுகிறது," என்கிறார் பாரதி புத்தகாலையத்தைச் சேர்ந்த காளிமுத்து.
அன்பு, பாசம், தாய்மை, நட்பு, காதல், பிரிவு போன்ற பல தலைப்புகளில் ஸ்னோலின் எழுதிய கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
’அம்மா’ என்ற தலைப்பில் ஸ்னோலின் எழுதிய கவிதையின் சிலவரிகள் இவை,

“இப்பொதெல்லாம் தூங்குவதற்கு முன்
கொஞ்ச நேரம்
என் அம்மாவை
இமைக்காமல் பார்த்துவிட்டுதான்
கண் மூடுகிறேன்
ஒருவேளை தூக்கத்திலேயே
என் உயிர் பிரிந்தாலும்
நான் கடைசியாகப் பார்த்தது
என்
அம்மாவின் முகமாகத்தான்
இருக்க வேண்டும்”