திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஆண்டு 6 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல் ஆசைதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஆண்டு 6 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த வக்கீல் ஆசைதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த ஏ.வி. குமார், நிக்சன், சிவராமன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தேங்காய் பருப்பு வாங்குவதற்காக காங்கேயம் நால்ரோடு பகுதிக்குச் சென்றனர். அங்கு காருடன் அவர்களை கடத்திச் சென்ற கும்பல், மூவரையும் ஈரோடு, குமாரபாளையம் பகுதிகளில் வைத்து பலமாக தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது சொகுசு காரையும், ரொக்கம் ரூ. 6 லட்சத்தையும் 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது.
பின்னர், ஏமாற்றப்பட்டவர்களில் நிக்சன் அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (42), ரகுநாதசாமி (37), பாலமுருகன் (31), குகன் (42), ஈரோடு வரதராஜன் (45), காங்கேயம் சேர்ந்த வக்கீல் ஆசைதம்பி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஏற்கனவே 5 கொலை வழக்குகள், பல கடத்தல், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள வக்கீல் ஆசைதம்பியை காங்கேயம் ஆய்வாளர் எஸ். முருகேசன் தலைமையிலான போலீசார் கோவையில் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை காங்கேயம் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி .சுப்பிரமணியம், வக்கீல் ஆசைதம்பியை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வக்கீல் ஆசைதம்பி மீது நீலகிரி போலீசார் குண்டாஸ் ஏற்கனவே பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.