தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிப்பதுதான் சரியாக எனச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிப்பதுதான் சரியாக எனச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் 100-வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், `துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிப்பதே முறையாக இருக்கும். மனுதாரர் சி.பி.ஐ.,யிடம் மனு கொடுக்கலாமே"என்று குறிப்பிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.