கோவை: மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் கோவைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது.
கோவை: மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலின் அடிப்படையில் கோவைக்கு 14 வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை அறிவித்தது. தமிழகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முயற்சியால் மாநில அரசு நிதியுடன் இணைந்து 12 சீர்மிகு நகரங்களை ஒதுக்கியுள்ளது. இதன் திட்ட காலம் 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. அதற்கு, இணையாகத் தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது.
இந்த திட்டப்படி, கோவை மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெற்றது. மாநகரை 'ஸ்மார்ட்'ஆக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாதிரி சாலைகள், தூய்மையான குளங்கள், நல்ல சாலைகள் என கோவையை மாற்றி எடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு சிறந்த முறையில் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவரும் நகரங்களை கணக்கெடுக்கும் பணியினை மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். அந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 82.26 மதிப்பெண்களுடன் கோவை மாநகராட்சி தேசிய அளவில் 14-வது இடத்தைப் பெற்று, தமிழக அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
31.46 மதிப்பெண்களுடன் சென்னை தேசிய அளவில் 37-வது இடத்திலும், 16.39 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு 49-வது இடத்தையும் பெற்றுள்ளது.
நாட்டிலேயே சிறந்த ஸ்மார்ட் சிட்டியாக நாக்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 259.96 மதிப்பெண்களுடன் அந்த நகரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "ஸ்வச் சர்வேக்ஷன் எனப்படும் தூய்மை நகரங்களுக்கான பட்டியலிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நகரங்களின் பட்டியலிலும் கோவை முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளது. தரவரிசை பட்டியலில் முன்னிலை வகிக்க அரசு அதிகாரிகளோடு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்." என்றார்.
வரும் ஜூன் 25-ம் தேதி ஸ்மார்ட் சிட்டி நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரிய மின் உற்பத்தி நிலையம், உக்கடம் பெரியகுளம் - வாலாங்குளம் மேம்பாட்டுப் பணிகள், மாதிரி சாலை பணிகள் ஆகியவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.