நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அதை உட்கொண்டு வன விலங்குகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாகு நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார். மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட எல்லைகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம் என விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களிடையேயும், சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தற்போதைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கடந்த 13-ம் தேதி 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, அண்டை மாநிலங்களான கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை கக்கநல்லா சோதனை சாவடியிலும், கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை பாட்ட வயல், நாடு காணி போன்ற சோதனை சாவடிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் காரில் இருந்தால் ரூ.50-ம், டெம்போ டிராவலருக்கு ரூ.100-ம், சுற்றுலாப் பேருந்துகளுக்கு ரூ. 250-ம், சில்லரை விற்பனைக்காக எடுத்து வரும் வாகனங்களுக்கு ரூ.10,000-ம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
