கோவை : வால்பாறையில் கடந்த 15 நாட்களில் சிறுத்தைப்புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கோவை : வால்பாறையில் கடந்த 15 நாட்களில் சிறுத்தைப்புலி தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சின்கோனா எஸ்டேட் பகுதியில் தோட்டத் தொழிலாளி மாதவி (35) என்பவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டின் முன்புறம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி தாக்கியதில் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம், வால்பாறை மற்றும் அவரது சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களில் மூன்று பேரை சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து நடமாடி வரும் சிறுத்தைப் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி சின்கோனா அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிப்பதாக வனத்துறையினர் உறுதியளித்திருந்தனர். அதன்படி, அங்கு கூண்டு வைத்திருந்தாலும், சிறுத்தைப்புலியைப் பிடிப்பதற்காக இரை ஏதும் அதில் வைக்கப்படுவதில்லை. இதனால், தான் சிறுத்தைப்புலி இன்னும் கூண்டில் அகப்படாமல், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, தேயிலைத் தோட்டத் தொழிலாளி மாதவியை சிறுத்தைப்புலி தாக்கியதன் காரணமாக, அங்கு பணிபுரியும் பிற தோட்டத் தொழிலாளர்கள் செல்லவில்லை. மாறாக, டாண்டீ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்து, உடனடியாக மாவட்ட வனத்துறை அலுவலர் மாரிமுத்து, வனத்துறை அலுவலர் சேகர், டாண்டீ நிர்வாக இயக்குநர் சீனிவாச ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உடனடியாக அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள புதர்கள் அகற்றப்படும் போன்ற வாக்குறுதிகளை அவர்கள் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், மழையின் காரணமாக அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் மின்சாரமும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.