தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க மாநில கல்வித்துறை முடிவு செய்திருப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க மாநில கல்வித்துறை முடிவு செய்திருப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கோவை ஸ்மார்ட் சிட்டியின் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வார்டுகளில் அமைந்துள்ள 22 மாநகராட்சி பள்ளிகளில், 5 பள்ளிகளை 'ஸ்மார்ட் பள்ளி'களாக தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டது.
இப்பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஸ்மார்ட் போர்டு அமைத்தல், பாடத்திட்டங்களை இணையவழியில் பெறுதல், நவீன உட்கட்டமைப்புகளை உருவாக்குதல், நவீன கழிப்பறைகள் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள கடந்த வருடம் நவம்பர் மாதம் அரசு அனுமதி பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சென்ற பிப்ரவரி மாதம் தொழில்நுட்ப அனுமதியும், ஒப்பந்தப்புள்ளிகளும் பெறப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட இருந்தன.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்திடவும், நவீன டிஜிட்டல் வகுப்பறைகளை அமைத்திடவும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பள்ளிகளை ’ஸ்மார்ட் பள்ளி’களாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறுகையில், "அனைத்து அரசு பள்ளிகளையும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப் பள்ளி கல்வித்துறை முடிவு செய்திருப்பதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த ’ஸ்மார்ட் பள்ளி’ திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்காக இந்நிதியாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ரூ. 27.51 கோடி நிதி, மற்ற வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்படும்,"என்றார்.