நீலகிரி: மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
நீலகிரி: மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சி மற்றும் 35 ஊராட்சிகள் அடங்கிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தீர்மானங்கள் இயற்றப்பட்டு, நீலகிரி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு, எண் இரண்டில் கடந்த மே 9-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. இம்மாவட்டத்தில், அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், கரண்டிகள், கத்திகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர, ஸ்டைலோபோம், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மாகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப் பயன்படும் பிளாஸ்டிக்குகள், லாமினேஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லாமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் விவரம்:-
சில்லரை விற்பனையாளர்கள் அரை கிலோ பிளாஸ்டிக் வைத்திருந்தால் அபராதம் ரூ.1,000, மொத்த விற்பனையாளர்களுக்கு அரை கிலோ வரை ரூ.5,000, திருமண மண்டபங்களுக்கு அரை கிலோ வரை ரூ. 20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அனைத்து தரப்பினரும், இந்த அறிவிப்பை பின்பற்றி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுச் சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.