கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கோவையை அடுத்த சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000-ம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், இன்னமும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக, விபத்தில் காயமடைந்த லதா என்ற கல்லூரி மாணவிக்கு கால் ஒன்று அகற்றப்பட்டதோடு, இதுவரை ரூ. 10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேருந்து மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், படுகாயமடைந்து தற்போதும் சிகிச்சை பெற்று வரும் 7 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'படுகாயமடைந்தவர்கள் இன்றும் உடல்நிலை தேராமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். எனவே, தங்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அரசு வேலையும் வழங்க வேண்டும்,' என வலியுறித்தியுள்ளனர்.