கோவை: இந்திய அளவில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். அதன்படி, தற்போது கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காடுகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
கோவை: இந்திய அளவில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். அதன்படி, தற்போது கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காடுகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. கோவை வனக்கோட்டம், 670 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகளை கொண்டது. இதில், கோவை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி மற்றும் மதுக்கரை என மொத்தம் ஏழு வனச்சரகங்கள் உள்ளன.

இயற்கை ஏழில் மிகுந்த இப்பசுமை காடுகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.
மொத்தம் 48 பீட்டுகளில் நடக்கும் இக்கணக்கெடுப்பில் வனப்பணியாளர்கள், சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 220 பேர் ஈடுபட்டுள்ளனர். புலிகளை நேரில் காணுதல், கண்காணிப்பு கேமராவில் பதிவாகுதல், புலிகளின் கால் தடப்பதிவு, அவற்றின் கழிவு மற்றும் எச்சம், மரங்களில் உள்ள கீறல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், "புலிகள் இரவில் நடமாடும் விலங்குகளாகும். இதனால், அதனை பார்ப்பது என்பது அரிதான காரியமாகும். ஆனால், அவற்றின் நடமாட்டத்தை கால் தடயங்கள், எச்சம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். புலிகளின் அடிப்படை குணங்களை தெரிந்து கொண்டால், அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரிக்க எளிதாக இருக்கும்," என்றார்.

மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் இன்று அதிகாலை ஆறு மணி முதல் 120 பேர் 28 குழுக்களாகப் பிரிந்து இக்கணக்கெடுப்பு பணி துவக்கினர். குறிப்பாக, நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் புலிகளின் காலடி தடம் மற்றும் எச்சங்களை சேகரித்து வருகின்றனர். இந்தப் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி வரும் 11 ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
'கடந்த 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் இந்திய அளவில் 2,226 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒவ்வொரு வனக்கோட்டமாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் முடிவில் தேசிய அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைத்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா எனத் தெரிய வரும், என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.