கோவை: ஊதியத்தை முறைப்படுத்தி வழங்க வலியுறுத்தி இன்று நடைபெறவிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கோவை: ஊதியத்தை முறைப்படுத்தி வழங்க வலியுறுத்தி இன்று நடைபெறவிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்கிய 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சம்பள உயர்வை முழுமையாக வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் மீதான பேச்சுவார்த்தை டி.சி.எல்., முன்னிலையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பெர்பார்மன்ஸ் முறை கைவிடப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் (0% -9%) மொத்த சம்பளத்தில் 10% வழங்கப்படும், அதற்கான கொடுபடா தொகை (Arrears) 1.4.2017 முதல் 31.3.2018 வரை ஜூன் மாத சம்பளத்துடன் தரப்படும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், 2018-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, முடிவு செய்வதாகவும் நிர்வாக தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில், 1947 தொழில் தகராறு சட்டம் பிரிவு 12(3)படி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இதுகுறித்து 108 ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பாக்கியராஜ் கூறியதாவது :- தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் நலன் கருதி எங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கி உள்ளோம். ஆனால், 10 சதவீத உயர்வு என்பது போதாதுதான். அடுத்த கட்டமாக தொழிலாளர்களின் நலன் கருதி நிர்வாகம் நியாயமான சம்பளத்தை தர வேண்டும், எனத் தெரிவித்தார்.
